
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான நவாப் மாலிக்கின் கைது அரசியல் உள்நோக்கம் கொண்டது என அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இஸ்லாமியர் என்பதாலேயே தாவூத் இப்ராஹிமிடம் அவருக்கு தொடர்பிருப்பதாக கூறுகிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நவாப் மாலிக், தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையை அவர் மறுத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி, பண மோசடி வழக்கில் தாவூத் இப்ராஹிமிடம் தொடர்பு இருப்பதாக கூறி அமலாக்கத்துறையினரால் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து சரத் பவார் விரிவாக பேசுகையில், "மாலிக்கின் கைது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இஸ்லாமியர் என்பதாலேயே தாவூத் இப்ராஹிமிடம் அவருக்கு தொடர்பிருப்பதாக கூறுகிறார்கள். மாலிக் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வேண்டுமென்றே துன்புறுத்தப்படுகிறார்கள், ஆனால் நாங்கள் எதிர்த்துப் போராடுவோம்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த நாராயண் ரானே சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அதற்கு பிறகு அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக எனக்கு நினைவில் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி நாளை புனே வருகிறார். அவர் அதைப் பற்றி மேலும் விளக்கலாம். மாலிக்கிற்கு ஒரு அளவுகோலையும், ரானேவுக்கு மற்றொரு அளவுகோலையும் பயன்படுத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதைக் காட்டுகிறது.
பல்வேறு தலைவர்களின் போன் ஒட்டுக் கேட்கப்பட்டிருப்பது தொடர்பான ஆவணங்களை நான் பார்த்திருக்கிறேன். இது தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆட்சியின் போது நடந்துள்ளது. உத்தரவுகளை மட்டும் பின்பற்றிய அதிகாரிகள் அதன் விளைவுகளைச் சந்தித்து வருகின்றனர். நாட்டில் இவ்வாறானதொரு நிலையை இதற்கு முன்னர் நான் கண்டதில்லை.
பிசி அலெக்சாண்டர் போன்ற ஆளுநர்கள் மரபை கொண்டது மகாராஷ்டிரம். தற்போதைய ஆளுநர் என்ன செய்கிறார் என்பது பற்றி நான் பேசக்கூடாது. மத்திய அரசு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்கிறது, அதற்கு மகாராஷ்டிரா சமீபத்திய உதாரணம்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.