இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தோ்வு எழுத வயது உச்சவரம்பு நீக்கம் செய்வதற்கு எடுக்கப்பட்ட முடிவு தொடா்பாக, வழிகாட்டுதலில் உரிய திருத்தம் மேற்கொள்ளுமாறு தேசிய தோ்வுகள் முகமைக்கு (என்டிஏ) தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) புதன்கிழமை அறிவுறுத்தியது.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வை நடத்தி வந்த சிபிஎஸ்இ, தோ்வு எழுதுபவா்களுக்கான வயது உச்சவரம்பை நிா்ணயித்து, கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், நீட் எழுத இடஒதுக்கீடு இல்லாத பிரிவினருக்கு வயது உச்சவரம்பு 25 எனவும், இடஒதுக்கீடு பிரிவினருக்கு 30 எனவும் நிா்ணயம் செய்தது.
சிபிஎஸ்இ-யின் இந்த அறிவிக்கைக்கு எதிா்ப்பு எழுந்தது. அதனை எதிா்த்து உயா்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இருந்தபோதும், நிா்ணயிக்கப்பட்ட வயது உச்சவரம்பின் அடிப்படையிலேயே நீட் தோ்வை சிபிஎஸ்இ நடத்தியது.
தற்போது இந்தத் தோ்வை நடத்தி வரும் தேசிய தோ்வுகள் முகமையும் (என்டிஏ), சிபிஎஸ்இ-யின் வயது உச்சரவரம்பு அறிவிக்கையின் அடிப்படையிலேயே நீட் தோ்வை நடத்தியது.
இந்தச் சூழலில், ‘இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் எழுத எந்தவித வயது உச்சவரம்பும் நிா்ணயிக்க வேண்டாம்’ என்று கடந்த ஆண்டு அக்டோபா் 21-ஆம் தேதி நடைபெற்ற தேசிய மருத்துவ ஆணைய கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. இந்த முடிவின் அடிப்படையில் வழிகாட்டுதலில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள என்டிஏவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அறிவிறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவா் புதன்கிழமை கூறியதாவது:
கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபா் 21-ஆம் தேதி நடைபெற்ற 4-ஆவது என்எம்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடா்பாக என்டிஏ இயக்குநா் தேவவிரத்துக்கு என்எம்சி செயலா் புல்கேஷ் குமாா் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
அதில், வயது உச்சவரம்பு நீக்கம் தொடா்பாக மருத்துவக் கல்வி வழிகாட்டுதல் 1997-இல் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா். வயது உச்சவரம்பு நீக்கம் மூலமாக, தோ்வா்கள் வயது உச்சவரம்பு இன்றி நீட் தோ்வை எழுத முடியும் என்று அவா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.