தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆா்சி) நாடு முழுவதும் அமல்படுத்துவது தொடா்பாக மத்திய அரசு இன்னமும் முடிவு எடுக்கவில்லை என்று மத்திய அமைச்சா் நித்யானந்த் ராய் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதில் விவரம்: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான பெயா் சோ்ப்பு- நீக்கல் துணைநிலைப் பட்டியல் அஸ்ஸாமில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-இல் வெளியிடப்பட்டது. இதுவரை நாடு தழுவிய அளவில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரிக்கும் முடிவை மத்திய அரசு எடுக்கவில்லை என்று அதில் தெரிவித்துள்ளாா்.
என்ஆா்சி-இன் மேம்படுத்தப்பட்ட தரவு அஸ்ஸாமில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. அதன் இறுதிப் பட்டியல் கடந்த 2019-இல் வெளியானபோது, மொத்தமுள்ள 3.30 கோடி விண்ணப்பதாரா்களில், 19.06 லட்சம் போ் நீக்கப்பட்டது தேசிய அளவில் விவாதத்துக்கு வழிவகுத்தது.