லக்கிம்பூர் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமினை ரத்து செய்யக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்க உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்தாண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது மத்திய மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கார் ஏற்றியதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் மேலும் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த விவகாரத்தை விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு ஆஷிஷ் மிஸ்ரா குற்றவாளி என வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி முக்கிய குற்றவாளியான ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமினை ரத்து செய்யக்கோரி உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கு குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜராகவுள்ள வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தெரிவித்ததாவது:
“ஆஷிஷ் மிஸ்ரா ஜாமினில் வெளிவந்த சில நாள்களிலேயே பாதுகாக்கப்பட்ட முக்கிய சாட்டியாக கருதப்படும் நபரை கொடூரமாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டது. இனி, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என தாக்கியவர்கள் மிரட்டியுள்ளதாக தெரிவித்தார்.”