மேற்கு வங்கத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 26 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில நாள்களாகவே திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பரோசல் கிராமத் துணைத் தலைவரான பது ஷேக் மீது வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் பலியானார்.
இந்த சம்பவத்தில் ஆத்திரமடைந்த பது ஷேக்கின் ஆதரவாளர்கள், எதிர்தரப்பினரின் குடிசைப் பகுதிகளில் தீ வைத்ததில் 10க்கும் மேற்பட்டோர் எரிந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சுவேந்து அதிகாரி கூறியதாவது:
“மேற்கு வங்கம் முழுவதும் சட்டம் - ஒழுங்கு மோசமாக உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 26 கொலைகள் நடந்துள்ளன.
மாநிலத்தின் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு தலையிட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் விதி 356-ஐ பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி அல்லது விதி 355-ஐ பயன்படுத்தி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்” என்றார்.