அசாம், மேகாலயா இடையே பல வருடங்களாக இருந்து வந்த எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் இருமாநிலங்களுக்கு இடையே இன்று (செவ்வாய்க்கிழமை) ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தமானது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், அசாம் முதல்வர் விஸ்வ சர்மா மற்றும் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா இடையே கையெழுத்திடப்பட்டது.
வடகிழக்கிற்கு இதுவொரு வரலாற்று நாள் என அமித் ஷா குறிப்பிட்டார். மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இருமாநிலங்களுக்கிடையே 70 சதவிகித எல்லைப் பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
அசாம் முதல்வரும் இதை வரலாற்று நாள் எனக் குறிப்பிட்டு பேசினார். பிரச்னைக்குரிய மற்ற இடங்களில் அடுத்த 6, 7 மாதங்களில் தீர்வு காணப்படும் என்றும் அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் இடையிலான எல்லைப் பிரச்னைக்கும் தீர்வு காண வேண்டும் என உள்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார் என்றும் முதல்வர் விஸ்வ சர்மா தெரிவித்தார்.