தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டில், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான நடவடிக்கைகள் மீது 1,296 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே எழுத்துபூர்வமாக பதிலளித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கைப்படி எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுக்கு எதிரான நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் அமல்படுத்தப்படுகின்றன.
இந்த சட்டவிதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தும்படி மாநிலம், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில், தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டில், எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு எதிரான நடவடிக்கைகள் மீது 1,296 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.
அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 12,717, மத்தியப் பிரதேசத்தில் 9300, பிகாரில் 7462 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சேர்த்து 2020ஆம் ஆண்டில் மட்டும் 58,538 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.