புதுதில்லி: சமீபத்தில் கிடைக்கப்பெற்றுள்ள தொற்று பாதிப்பு தகவல்களின்படி, தற்போதைய தொற்று பரவல் நான்காவது அலையின் தொடக்கம் என்று கூற முடியாது என இந்திய ஆராய்ச்சி கழகம் கூடுதல் இயக்குநர் ஜெனரல் டாக்டர் சமிரன் பாண்டா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டில் உள்ள தொற்று பாதிப்புகளை தொற்றுநோயின் நான்காவது அலையின் தொடக்கம் என்று கூற முடியாது. நாட்டில் ஓரிரு மாநிலங்களில் சில மாவட்டங்கள் அளவிலேயே தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுவதாகவும், தேசிய அளவில் பெரிய பாதிப்பு இல்லை. எனவே நாடு நான்காவது அலையை நோக்கி நகர்கிறது என்று கூற முடியாது என்று தெரிவித்தார்.
சமீபத்தில் கிடைத்துள்ள கரோனா பாதிப்பு தகவல்களின்படி, நாட்டில் சில மாநிலங்களில் “மாவட்ட அளவிலேயே சில பாதிப்புகள் காணப்படுகின்றன. இது ஒரு எதிர்பாராத பாதிப்பு என்று அழைக்கப்படுகிறது. நாட்டின் சில புவியியல் பகுதிகளில் மட்டுமே எதிர்பாராத பாதிப்பு உள்ளன,” என்று அவர் கூறினார்.
நாட்டில் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இது நான்காவது அலைக்கான அறிகுறி அல்ல என்று எப்படி சொல்கிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், முதலில் சோதனைகளின் அடிப்படையில் சில உள்ளூர் அளவிலேயே தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இரண்டாவதாக, நாம் பார்ப்பது ஒரு எதிர்பாராத பாதிப்பு மட்டுமே, மேலும் முழு மாநிலமும் தொற்று பாதிப்பில் இருப்பதாக கூற முடியாது. மூன்றாவதாக, நாடு முழுவதும் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் எந்த அதிகரிப்பும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் தொற்று பாதிப்பு விகிதத்தைப் பற்றி பேசுகையில், குறைந்த சோதனை காரணமாக சில நேரங்களில் விகிதம் அதிகரிக்கும் என்று சமிரன் பாண்டா கூறினார்.
பாண்டாவின் கூற்றுப்படி, இப்போது நான்காவது அலை இல்லை என்பதை உறுதி செய்யும் விதமாக புதிய தொற்று மாறுபாடு எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.