திருமண உறவில் நிகழும் பாலியல் வன்கொடுமையை குற்றமாக்கும் விவகாரத்தில் தில்லி உயர் நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்திய தண்டனையியல் சட்டப்பிரிவில் 375 (பாலியல் வன்கொடுமை) திருமண உறவில் நிகழும் பாலியல் வன்கொடுமைக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது கணவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் திருமணமான பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படும் வகையில் இருப்பதாக, அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சட்டப்பிரிவு 375-இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள விலக்கின் அடிப்படையில், மனைவி 18 வயதுக்கு மேற்பட்டவரானால், அவருடன் கணவன் மேற்கொள்ளும் பாலியல் உறவுகள் பாலியல் வன்கொடுமையாகாது.
இந்த வழக்கை தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஷக்தேர் மற்றும் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இதையும் படிக்க | '1000 வழக்கு தொடுத்தாலும் கவலையில்லை'.. பாஜக தலைவர் ஆவேசம்
தீர்ப்பை வாசித்த நீதிபதி ஷக்தேர், "சட்டப்பிரிவு 375 மற்றும் சட்டப்பிரிவு 376 (E)-க்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கம் 2 அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 14, 15, 19(1) (A) மற்றும் 21 ஆகியவற்றை மீறுவதாகும். எனவே, அந்த விலக்கத்தை நீக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
எனினும், நீதிபதி சங்கர் கூறுகையில், "படித்த சகோதரரின் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதிலுள்ள அம்சங்கள் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 14, 19 (1) (A) மற்றும் 21 ஆகியவற்றை மீறவில்லை" என்றார்.
இதையடுத்து, மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தில்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
முன்னதாக, 2017-இல் இதுதொடர்பான மனுக்களுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர், இதில் அரசின் நிலைப்பாடு குறித்து ஆலோசனைக்குப் பிறகு தெரிவிக்க மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அவகாசம் கோரியது. ஆனால், மும்பை உயர் நீதிமன்றம் கோரிக்கையை ஏற்கவில்லை.