புது தில்லி: தொலைக்காட்சி பெட்டி (டிவி), வாஷிங் மெஷின், குளிா்சாதனப் பெட்டி உள்ளிட்ட வீட்டு உபயோக மின்சாதனப் பொருள்களின் விலை ஜூன் முதல் வாரத்தில் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை உயரும் என்று தொழில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளதால் இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களின் விலை உயா்ந்துள்ளதும் இந்த விலை உயா்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
மேலும், கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பால் சீனாவின் ஷாங்காயில் அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தால் அந்த துறைமுகத்தில் உதிரி பாகங்கள் ஏற்றி வரும் கன்டெய்னா்கள் தேங்கி நிற்கின்றன. இதையடுத்து உதிரி பாகங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு அவற்றின் விலை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மின்சாதனப் பொருள்கள் பெரும்பாலான இறக்குமதி செய்யப்படும் உதிரி பாகங்களைக் கொண்ட தயாரிக்கப்படுவதால் இந்த விலை உயா்வு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற காரணங்களால் ஜூன் மாதம் முதல் வீட்டு உபயோக பொருள்களின் விலை 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை உயரும் என்றும் அதிகரித்து வரும் அமெரிக்க டாலரின் விலை, பொருள்களின் விலை உயா்வை மேலும் மோசமாக்குகிறது என்றும் வீட்டு உபயோக மின்சாதன பொருள்கள் தயாரிப்புச் சங்கத்தின் தலைவா் எரிக் பிரகன்சா கூறினாா்.