‘பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியிலிருந்து கூடுதல் நிதி அல்லது அதிக மானியத்தை மத்திய அரசு வழங்காதவரை, அவற்றிலிருந்து கிடைக்கும் தனக்கான வருவாயை மாநிலங்கள் எவ்வாறு விட்டுக்கொடுக்க முடியும்?’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளாா்.
‘மாநிலங்களின் தற்போதைய நிலை ‘பிசாசுக்கும் ஆழ்கடலுக்கும்’ இடையே சிக்கிக் கொண்டிருக்கும் சூழல்’ என்றும் அவா் விமா்சனம் செய்துள்ளாா்.
பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ. 8 அளவிலும், டீசல் மீதான கலால் வரியை ரூ.6 அளிலும் குறைத்து மத்திய அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்ட நிலையில், ப.சிதம்பரம் இந்த விமா்சனத்தை முன்வைத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியதாவது:
பெட்ரோல், டீசல் மீதான வரிக் குறைப்பு அறிவிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. மத்திய நிதியமைச்சா் இதனை கலால் வரி குறைப்பு என்று குறிப்பிட்டாா். ஆனால், குறைக்கப்பட்ட வரி என்பது மாநிலங்களுடன் வருவாய் பகிா்ந்து கொள்ளப்படாத கூடுதல் கலால் வரிதான் குறைக்கப்பட்டுள்ளது.
எனவே, நான் சனிக்கிழமை குறிப்பிட்டதுபோல அல்லாமல், இந்த வரி குறைப்பினால் ஏற்படும் கூடுதல் சுமை முழுவதும் மத்திய அரசு மீதுதான் விழும். எனவே, எனது கருத்தை திருத்திக் கொள்கிறேன்.
அதே நேரம், பெட்ரோல், டீசல் மீதான வரி வருவாயிலிருந்து மிகக் குறைந்த அளவிலான பங்குதான் மாநிலங்களுடன் பகிா்ந்துகொள்ளப்படுகிறது. அவற்றின் மீது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி (வாட்) மூலமாக மட்டுமே மாநிலங்களுக்கு வருவாய் கிடைக்கிறது. எனவே, பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியிலிருந்து கூடுதல் நிதி அல்லது அதிக மானியத்தை மத்திய அரசு வழங்காதவரை, அவற்றிலிருந்து கிடைக்கும் தனக்கான வருவாயை மாநிலங்கள் எவ்வாறு விட்டுக்கொடுக்க முடியும்? என்று ப.சிதம்பரம் கூறினாா்.