
தேசத் துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் தலைவர் ஷர்ஜீல் இமாம், தில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவைத் திரும்பப் பெற்றார்.
2019 மற்றும் 2020-இல் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்டு ஜேஎன்யு மாணவர் ஷர்ஜீல் இமாம் ஜனவரி, 2020-இல் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டது. அவர் ஏறத்தாழ 28 மாதங்களாக சிறையில் உள்ளார்.
இதனிடையே, தேசத் துரோக வழக்கு பதிவதற்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஜாமீன் கோரலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி ஷர்ஜீல் இமாம் தில்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் முக்தா குப்தா மற்றும் மினி புஷ்கர்னா ஆகியோர் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் அமித் பிரசாத்தின் வாதத்தைக் கேட்டனர்.
உச்ச நீதிமன்றம் 2014-இல் பிறப்பித்த உத்தரவின்படி, எந்தவொரு ஜாமீன் மனுவும் முதலில் விசாரணை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும். அங்கு கிடைக்காவிட்டால், குற்றம்சாட்டப்பட்டவர் உயர் நீதிமன்றத்துக்குச் செல்லாம் என வாதிட்டார்.
இதன்பிறகு, ஜாமீன் கோர கீழமை நீதிமன்றத்தை அணுகுமாறு ஷர்ஜீல் இமாமை தில்லி உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து, ஷர்ஜீல் இமாம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவானது திரும்பப் பெறப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.