
பழங்குடியினத் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் பிறந்த தினத்தையொட்டி, தனது விடியோ பதிவு உரை வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினார்.
அந்த விடியோவில் பிரதமர் மோடி பேசியிருப்பதாவது: மத்திய பாஜக அரசின் நலத் திட்டங்களால் கோடிக்கணக்கான பழங்குடியின குடும்பங்கள் பலனடைந்து வருகின்றன. அவர்கள் வாழ்வு எளிதாக மாறியுள்ளது. எனது அரசின் பல்வேறு திட்டங்களின் பின்னணியில் உத்வேகமாக இருப்பது பழங்குடியின சமூகம்தான்.
இச்சமூகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் நாடு முழுவதும் பிரத்யேக அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
புகழ்பெற்ற பழங்குடியினத் தலைவர் பிர்சா முண்டாவின் பிறந்த தினத்தை, "பழங்குடியினர் கௌரவ தினமாக' அறிவித்தது எனது அரசுதான். அவர் சுதந்திரப் போராட்ட வீரர் மட்டுமல்ல; நாட்டின் ஆன்மிகம் மற்றும் கலாசார வலிமையை கட்டிக் காத்தவர். பிர்சா முண்டா, திலக் மாஞ்சி உள்ளிட்ட தலைவர்கள், பழங்குடியினர் புரட்சியை வழிநடத்தி, அந்நிய ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடினர்.
தேசத்தின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதில், மகத்தான பழங்குடியின மரபில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கான வாய்ப்பாக, பழங்குடியினர் கௌரவ தினம் உள்ளது.
பழங்குடியினரின் பாரம்பரியம் தேசத்தின் பெருமையாகும். சுதந்திர தின உரையில் நான் குறிப்பிட்ட தேசத்துக்கான 5 வாக்குறுதிகளில் பழங்குடியினர் மேம்பாடும் முக்கிய அம்சமாகும். பிர்சா முண்டா உள்ளிட்ட பழங்குடியினத் தலைவர்களின் கனவை நனவாக்கும் பாதையில் தேசம் பயணிக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.