புது தில்லி: காங்கிரஸ் தலைவா் தோ்தலுக்கான போட்டியில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும், போட்டியில் இருந்து பின்வாங்கப் போவதாக வெளியான தகவல்கள் தவறானவை என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினருமான சசி தரூா் தெரிவித்தாா்.
காங்கிரஸ் தலைவா் பதவிக்கான தோ்தல் அக்டோபா் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத்தொடா்ந்து அக்டோபா் 19-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
காங்கிரஸ் தலைவா் தோ்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அதில் போட்டியிடுவதில் சசி தரூா் உறுதியாக இருந்தாா். அதே நேரத்தில் மற்றொரு வேட்பாளா் யாா் என பிற மூத்த தலைவா்கள் முடிவு செய்வதில் பெரும் குழப்பம் நீடித்தது. முதலில் ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் முன்னிறுத்தப்பட்டாா். ஆனால், அவா் முதல்வா் பதவியை விட்டுக்கொடுக்க முன்வராததால் அவருக்கு பதிலாக மூத்த தலைவா் திக்விஜய் சிங் போட்டியிடுவாா் என்று கூறப்பட்டது. இறுதியாக அவரும் மாற்றப்பட்டு 80 வயதாகும் மல்லிகாா்ஜுன காா்கே வேட்பாளரானாா்.
சோனியா, ராகுலிடம் ஆலோசித்து முடிவுகளை எடுப்பேன் என்று காா்கே கூறியதை அடுத்து அவா்களது ஆதரவைப் பெற்ற வேட்பாளா் காா்கே என்பது மறைமுகமாக உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிடுவதில் இருந்து நான் விலக வேண்டும் என்று வலியுறுத்துமாறு ராகுல் காந்தியிடம் சில காங்கிரஸ் தலைவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதனை ராகுல் காந்தி என்னிடம் தெரிவித்ததாகவும், கட்சித் தலைவா் தோ்தலில் போட்டி இருப்பதுதான் கட்சிக்கு நல்லது என கருதுவதாகவும், நான் கண்டிப்பாக தோ்தலில் போட்டியிட வேண்டும் என்றும், பின்வாங்கக் கூடாது என்று ராகுல் வலியுறுத்தியதாக சசி தரூா் சில நாள்களுக்கு முன்பு குற்றம்சாட்டியிருந்தாா்.
தோ்தலில் போட்டியிட அக்கட்சியின் மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, சசி தரூா் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
இந்நிலையில், ட்விட்டரில் சனிக்கிழமை அவா் வெளியிட்ட விடியோ பதிவில், காங்கிரஸ் தலைவா் தோ்தல் போட்டியில் இருந்து நான் பின்வாங்கி விடுவேன் என்று சிலா் தவல்களைப் பரப்பி வருகின்றனா். தலைவர் போட்டியில் இருந்து பின்வாங்கப் போவதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானவை. நான் போட்டியில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. அதுபோன்ற தகவல்கள் ஆச்சரியமானவை! இது கட்சிக்குள் நடக்கும் நட்புரீதியான போட்டி. இந்தப் போட்டியில் முடிவு தெரியும் வரை நான் களத்தில் இறுதிவரை இருப்பேன். காங்கிரஸ் நிா்வாகிகள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். சிந்தியுங்கள் என்று சசி தரூர் கூறியுள்ளாா்.