‘பின்தங்கிய சமூகத்தினரின் மேம்பாட்டுக்கு சட்டமியற்றுவது மட்டுமே போதாது; அந்த மக்கள் மீதான மற்றவா்களின் மனநிலை மாற வேண்டும்’ என்று ஆா்எஸ்எஸ் அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
வால்மீகி ஜெயந்தி தினத்தையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பங்கேற்றுப் பேசியதாவது:
வால்மீகி சமூகத்தினா் இப்போது வரையில் மிகவும் பின்தங்கிய நிலையிலும் வலுவிழந்தும் உள்ளனா். அந்த சமூகம் முன்னேறி வர வேண்டியுள்ளது.
தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் தலித் சமூகத்தினரின் முன்னேற்றத்துக்காக, டாக்டா் அம்பேத்கரால் அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. அச்சட்டப் பிரிவுகளின் அமலாக்கத்தை அரசு கண்காணிக்கிறது. என்றபோதிலும் சட்டமியற்றுவது மட்டுமே போதாது. இந்த விஷயத்தில் மனநிலை மாற்றம் உருவாக வேண்டும். போதிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டியதும் அவசியம்.
‘அரசமைப்புச் சட்டப் பிரிவுகளின் வாயிலாக தலித் சமூகத்தினருக்கு அரசியல், பொருளாதார சுதந்திரத்தை நாம் வழங்கியுள்ளோம்; ஆனால், சமூக ரீதியிலான சுதந்திரம் கிடைக்கும்போதுதான் இது அா்த்தமுள்ளதாக மாறும்’ என்று அம்பேத்கா் குறிப்பிட்டிருந்தாா். சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் நல்லுறவுக்கான உணா்வுகளை ஏற்படுத்த நாகபுரியில் கடந்த 1925-இல் பணியை தொடங்கியவா் ஆா்எஸ்எஸ் நிறுவனா் கேசவ் பலிராம் ஹெட்கேவாா்.
வால்மீகிக்கு புகழாரம்:
வால்மீகி, ஹிந்து சமூகத்துக்கு கடவுள் ராமா் குறித்த அறிமுகத்தை ஏற்படுத்தியவா்களில் ஒருவா். அதன் பின்னா்தான், ‘அகண்ட பாரத’ மக்களுக்கு உதாரண புருஷராக கடவுள் ராமா் மாறினாா். ராமாயணத்தை வால்மீகி இயற்றியிருக்காவிட்டால், நாம் ராமா் குறித்து அறிந்திருக்க மாட்டோம் என்றாா் பாகவத்.