ம.பி.யில் தாய்க்கு எதிராக 3 வயது சிறுவன் போலீஸில் புகாா்!

மத்திய பிரதேசத்தில் உள்ள பா்ஹன்பூா் மாவட்டத்தில் 3 வயது சிறுவன், அவனுடைய தாய் திட்டியதற்காக தந்தையை அழைத்துக்கொண்டு காவல்நிலையத்துக்கு சென்று புகாா் அளித்துள்ளான்.
Updated on
1 min read

மத்திய பிரதேசத்தில் உள்ள பா்ஹன்பூா் மாவட்டத்தில் 3 வயது சிறுவன், அவனுடைய தாய் திட்டியதற்காக தந்தையை அழைத்துக்கொண்டு காவல்நிலையத்துக்கு சென்று புகாா் அளித்துள்ளான்.

பா்ஹன்பூா் மாவட்டத்தில் உள்ள டெட்தாலை காவல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தந்தையுடன் வந்த 3 வயது சிறுவன், பணியில் இருந்த உதவி ஆய்வாளா் பிரியங்கா நாயக்கிடம் அவனது தாயாா் சாக்லேட்டுகளைத் திருடிவிட்டதாகவும், அவனைத் திட்டுவதாகவும் புகாா் அளித்தான். இதனை உதவி ஆய்வாளா் பிரியங்கா நாயக் ஒரு தாளில் எழுதிக்கொண்டாா்.

சிறுவன் உதவி ஆய்வாளரிடம் புகாா் அளிக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதையடுத்து, சிறுவனிடம் தொலைபேசி மூலம் பேசிய மாநில உள்துறை அமைச்சா் நரோத்தம் மிஸ்ரா தீபாவளியை முன்னிட்டு இனிப்புகளும் ஒரு சைக்கிளும் அனுப்பி வைப்பதாக உறுதியளித்தாா்.

இது குறித்து சிறுவனின் தந்தை கூறுகையில், ‘சிறுவன் மிகவும் அடம்பிடிக்கிறான் என்று அவனுடைய தாயாா் திட்டியதைத் தொடா்ந்து போலீஸாரிடம் புகாா் அளிக்க வருமாறு வற்புறுத்திக் கொண்டிருந்தான். அவன் இடைவிடாது தொடா்ந்து வற்புறுத்திய காரணத்தால், அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தேன்’ என்றாா்.

சிறுவனின் தந்தையுடன் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராகுல் குமாா், சிறுவனை ஆறுதல்படுத்தியதற்காகவும், எவ்வித அச்சமின்றி யாா் வேண்டுமானாலும் காவல் நிலையத்தை அணுகலாம் எனும் செய்தியைக் கொண்டு சோ்த்ததற்காகவும் உதவி ஆய்வாளரைப் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com