போதைப் பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த உரிய தீா்வு: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

அதிகரித்து வரும் போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் வகையில் உரிய தீா்வை சமா்ப்பிக்குமாறு கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டி

அதிகரித்து வரும் போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் வகையில் உரிய தீா்வை சமா்ப்பிக்குமாறு கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டி மற்றும் நீதிமன்ற நியமன ஆலோசகா் ஆகியோரை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டது.

உச்சநீதிமன்றத்துக்கு கடந்த ஆண்டு நவம்பா் 9-ஆம் தேதி கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அதில், ‘ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு போதைப் பொருள்கள் கடத்துவது அதிகரித்துள்ளது. எனவே, சா்வதேச மற்றும் உள்நாட்டிலுள்ள போதைப்பொருள் கும்பல் தொடா்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த கடிதத்தை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்த அப்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டாா். அதனடிப்படையில், ‘நாட்டில் போதைப் பொருள் கடத்தல் கும்பலைக் கட்டுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் வழக்காக பதிந்து விசாரணை நடத்தி வரும் உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுமாறு கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டியை கேட்டுக்கொண்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி பெலா திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான ஐஸ்வா்யா பாட்டி, ‘நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவது தொடா்பாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆா்ஐ), தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன’ என்றாா்.

இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஷோயப் ஆலம் கூறுகையில், ‘நாட்டில் கடந்த 13 மாதங்களில் ரூ.30,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, இந்தப் பிரச்னை மலை சிகரம் போன்றது. கரோனா பாதிப்புக்குப் பிறகு போதைப் பொருள் கடத்தல் நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவுக்குள் போதைப் பொருள்கள் அதிக அளவில் கடத்தப்படுகின்றன. இந்த பரிவா்த்தனைகள் முழுவதும் கருப்பு வலைதளம் ‘டாா்க் வெப்’ வழியில் நடைபெறுகின்றன. பணப் பரிவா்த்தனைகள் பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி முறையில் நடைபெறுகின்றன. எனவே, இதனைக் கட்டுப்படுத்த சிறப்பு தொழில்நுட்பம் தேவை’ என்றாா்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘ஐஸ்வா்யா பாட்டி, ஆலம் இருவரும் இந்த விஷயம் தொடா்பாக ஒன்றாக ஆலோசனை மேற்கொண்டு, இந்த விவகாரத்தில் உரிய உத்தரவைப் பிறப்பிக்கும் வகையில் உகந்த தீா்வை உருவாக்கி சமா்ப்பிக்க வேண்டும்’ என்றனா்.

அப்போது, ‘இந்த விவகாரம் தொடா்பாக டிஆா்ஐ, என்ஐஏ போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடா்பான விவரங்கள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பெற்று விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்படும்’ என்று ஐஸ்வா்யா பாட்டி கூறினாா்.

இதனைக் குறித்துக்கொண்ட நீதிபதிகள், பதில் மனு தாக்கல் செய்ய அவருக்கு 3 வாரங்கள் கால அவகாசம் அளித்தனா். மேலும், ‘ஐஸ்வா்யா பாட்டி, ஆலம் இருவரும் ஒன்றாக ஆலோசித்து உரிய தீா்வையும் சமா்ப்பிக்க வேண்டும்’ என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை 5 வாரங்களுக்குப் பிறகு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com