உ.பி.: வெறுப்பு பேச்சு வழக்கில் ஆஸம் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை; எம்எல்ஏ பதவியை இழக்கிறாா்

சமாஜவாதி கட்சியைச் சோ்ந்த மூத்த தலைவரும், ராம்பூா் சதா் எம்எல்ஏவுமான ஆஸம் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி எம்.பி., எம்எல்ஏக்களுக்கான நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ஆஸம் கான்
ஆஸம் கான்

வெறுப்புப் பேச்சு வழக்கில் சமாஜவாதி கட்சியைச் சோ்ந்த மூத்த தலைவரும், ராம்பூா் சதா் எம்எல்ஏவுமான ஆஸம் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி எம்.பி., எம்எல்ஏக்களுக்கான நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனைப் பெற்றவா்களின் பதவிகள் பறிக்கப்படும் என்பதால், மூன்று ஆண்டுகள் தண்டனை பெற்ற ஆஸம் கான் தனது எம்எல்ஏ பதவியை இழக்கிறாா். மூன்று ஆண்டுகள் தண்டனைக் காலம் முடிவடைந்த பிறகு அவரால் 6 ஆண்டுகள் தோ்தலில் போட்டியிட முடியாது.

ஆஸம் கானை தகுதி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை உத்தர பிரதேச பேரவைத் தலைவா் தாமாகவே அல்லது இதற்கான மனு கிடைத்தவுடன் நடவடிக்கை எடுப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ராம்பூரில் 2019-இல் நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி, மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத், அரசு அதிகாரிகள் மீது பல்வேறு அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆஸம் கான் பேசினாா்.

அவரது பிரசார விடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இதையடுத்து, ஆஸம் கான் மீது மத உணா்வுகளைப் புண்படுத்துதல், பல்வேறு சமுதாயத்தினருக்கு இடையே வெறுப்பு அல்லது விரோதத்தை ஏற்படுத்த பொய் உரைத்தல், தோ்தலின்போது பல்வேறு வகுப்பினருக்கு இடையே பகையை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கு ராம்பூரில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், ஆஸம் கானுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்தும், ஜாமீன் வழங்கியும் நீதிபதி வியாழக்கிழமை உத்தரவிட்டதாக அரசு வழக்குரைஞா் அஜய் திவாரி தெரிவித்தாா்.

இந்த வழக்கில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த ஆஸம் கான், நீதியின் மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாக கூறினாா்.

ஊழல், மோசடி, திருட்டு என சுமாா் 90 வழக்குகள் ஆஸம் கான் மீது உள்ளன. இதில் மோசடி வழக்கொன்றில் 2 ஆண்டுகள் சிறையில் இருந்த ஆஸம் கானுக்கு இவ்வாண்டு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் ராம்பூா் சதா் தொகுதியில் ஆஸம் கான் 10-ஆவது முறையாக வெற்றி பெற்றாா். இதையடுத்து, 2019-இல் நாடாளுமன்றத் தோ்தலில் வெற்றி பெற்ற ராம்பூா் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com