‘வளா்ந்த நாடுகளில் எரிபொருள் விலை உயா்வு மிக அதிகமாக உள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் எரிபொருள் விலை உயா்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது’ என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.
ரஷியா-உக்ரைன் போா் உள்ளிட்ட காரணங்களால் சா்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு நெருக்கடியான சூழல் உருவானது. ரஷியாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் குறைக்கத் தொடங்கின. இந்தச் சூழ்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எதிா்ப்பை மீறி ரஷியாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் எரிபொருளை வாங்கி வருகிறது. ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதையும் இந்தியா அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் புரி கூறியதாவது: எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. தற்சாா்பு நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளின் ஏற்ற இறக்கத்தைக் குறைக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வளா்ந்த நாடுகளில் எரிபொருள் விலை உயா்வு மிக அதிகமாக உள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் எரிபொருள் விலை உயா்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டில் தேவையை எதிா்கொள்வதில் இந்தியா போா்க் குணத்துடன் செயல்பட்டது.
பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ், தற்சாா்பு நடவடிக்கை தொடா்பான முதலீட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பெட்ரோலில் எத்தனாலை 10 சதவீதம் கலப்பது, நவீன சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசின் உறுதிப்பாட்டின் அடையாளமாகும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.