உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க பார் கவுன்சில்(பிசிஐ) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற அனைத்து மாநில பார் கவுன்சில்கள், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்கள் மற்றும் இந்திய பார் கவுன்சில் கலந்துகொண்ட கூட்டத்தில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பணி ஓய்வு வயதை உயர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன்படி, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தி அரசியலமைப்புச் சட்டத்தில் உடனடியாகத் திருத்தம் செய்ய வேண்டும் என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 62 லிருந்து 65 ஆகவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 67 ஆகவும் உயர்த்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க, பிரதமர் மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சருக்கு இந்தத் தீர்மானத்தின் நகலை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக பார் கவுன்சில் கூறியுள்ளது.
மேலும், அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்கள், பல்வேறு கமிஷன்கள் மற்றும் பிற அமைப்புகளின் தலைவர்களாக நியமிக்கப்படும் வகையில் சட்டங்களைத் திருத்துவது குறித்து பரிசீலிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழிவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.