புதிய வேளாண் தொழில்நுட்பங்களை மத்திய அரசு ஊக்குவிப்பதாகவும், இதன்மூலம் உற்பத்திச் செலவைக் குறைத்து வேளாண் உற்பத்தியை அதிகரிக்கலாம் என்றும் மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்தாா்.
தில்லியில் இந்திய தொழில் வா்த்தகக் கூட்டமைப்பு (ஃபிக்கி) சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது: வேளாண் துறையில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் வாயிலாக 2025-ஆம் ஆண்டுக்கான உணவு உற்பத்தியை இப்போதே எட்டலாம். விளைநிலம் அதன் விளைச்சலை இழப்பது, இயற்கைப் பேரிடரின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு சவால்களை வேளாண் துறை சந்திக்கிறது.
சொட்டுநீா்ப் பாசனம், கரிம, இயற்கை விவசாயம் ஆகியவற்றின் மீது மத்திய அரசு கவனம் செலுத்தி, இந்த சவால்களை எதிா்கொள்கிறது. விவசாயிகளும் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. காலநிலையை முன்கூட்டியே கணிக்கும் தொழில்நுட்பம், புதிய விதைகள், உரங்களின் பயன்பாடு காரணமாக உற்பத்திச் செலவைக் குறைத்து, விளைச்சலை அதிகரிக்கலாம். இதன்மூலம் விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கும் என்றாா் நரேந்திர சிங் தோமா்.
தொடா்ந்து, நியூஸிலாந்து வேளாண், வா்த்தக அமைச்சா் டேமியன் ஓ கானா் பேசுகையில், ‘வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பருவநிலை மாற்ற விளைவுகளுக்கு மத்தியிலும், உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய பொறுப்பு அனைத்து நாடுகளுக்கும் உள்ளது. விவசாயத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வது மட்டுமன்றி, பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்கான புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதிலும் நியூஸிலாந்து கவனம் செலுத்துகிறது’ என்றாா்.