மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை பிகார் சென்றுள்ளார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பூர்ணியா மற்றும் கிஷன் கஞ்ச் செல்கிறார்.
பிகார் சென்றுள்ள அமித் ஷா, பூர்ணியாவில் உள்ள ரங்பூமி மைதானத்தில் நடைபெறும் ஜன்பவ்னா பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
பிகார் மாநிலத்தில் மாறிவரும் அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் அமித் ஷாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிகார் பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
அமித் ஷா வெள்ளிக்கிழமை பிற்பகலில் கிஷன் கஞ்சில் பாஜக மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் பாஜகவின் அலுவலகப் பணியாளர்களை சந்திக்கிறார். பின்னர், பிகாரில் நிலவும் அரசியல் நிலவரம் குறித்து பிகார் பாஜக முக்கியக் குழுவுடன் ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்துகிறார்.
நாளை சனிக்கிழமை எஸ்எஸ்பி முகாமுக்குச் செல்லும் அமித் ஷா, கிஷன் கஞ்சில் உள்ள பிஎஸ்எஃப் முகாமில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார்.
அமித் ஷா தில்லிக்கு புறப்படுவதற்கு முன், மஹோத்ஸவாவையொட்டி கிஷன் கஞ்சில் உள்ள மாதா குஜாரி கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'சுந்தர் சுபூமி' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்ட பிறகு அமித் ஷா பிகார் மாநிலத்துக்குச் சென்றுள்ள முதல் பயணம் இதுவாகும்.