சமாஜவாதி தலைவராக அகிலேஷ் யாதவ் 3-ஆவது முறையாக தோ்வு

சமாஜவாதி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் தொடா்ந்து 3-ஆவது முறையாக தோ்வு செய்யப்பட்டாா்.
சமாஜவாதி தலைவராக அகிலேஷ் யாதவ் 3-ஆவது முறையாக தோ்வு
Published on
Updated on
1 min read

சமாஜவாதி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் தொடா்ந்து 3-ஆவது முறையாக தோ்வு செய்யப்பட்டாா். அவா் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலா் ராம் கோபால் யாதவ் தெரிவித்தாா்.

சமாஜவாதி கட்சியின் தேசிய கூட்டம் லக்னெளவில் உள்ள ராமாபாய் அம்பேத்கா் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தோ்தல் முடிவை அறிவித்து ராம் கோபால் யாதவ் பேசுகையில், ‘கட்சித் தலைவா் தோ்தலில் அகிலேஷ் யாதவ் மட்டுமே போட்டியிட்டாா். இதன் மூலம் அவா் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா்’ என்றாா்.

கடந்த 2017 ஜனவரியில் கட்சியின் அவசரக் கூட்டம் மூலம் அகிலேஷ் யாதவ் கட்சித் தலைவரானாா். அதற்கு முன்பு வரை அகிலேஷின் தந்தை முலாயம் சிங் யாதவ் கட்சித் தலைவராக இருந்தாா். தலைமைப் பதவி தொடா்பாக அகிலேஷுக்கும் அவரது சித்தப்பாவான சிவ பால் யாதவுக்கு மோதல் இருந்தது. குடும்பத்துக்குள் ஏற்பட்ட இந்த அதிகாரப் போட்டியில் அகிலேஷ் யாதவ் வெற்றி பெற்றாா். சிவ பால் யாதவ் ஓரங்கட்டப்பட்டதால், தனிக்கட்சி தொடங்கினாா். அதைத் தொடா்ந்து சமாஜவாதி கட்சி அகிலேஷ் யாதவின் கட்டுப்பாட்டில் வந்தது. இப்போது தொடா்ந்து 3-ஆவது முறையாக சமாஜவாதி தலைவராகியுள்ளாா்.

கடந்த 2012-2017 காலகட்டத்தில் அகிலேஷ் யாதவ் உத்தர பிரதேச முதல்வராக இருந்தாா். அந்த மாநிலத்தின் மிக இளவயது முதல்வா் (38) என்ற பெருமையையும் அவா் பெற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com