தில்லியில் நவீன வசதிகளுடன் அமைந்திருக்கும் அரசுப் பள்ளியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோருடன் சென்று, தில்லி அரசுப் பள்ளியை ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார்.
அரசுப் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், தில்லி அரசுப் பள்ளிகள் செயல்படும் விதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முதல்வர் ஸ்டாலினுக்கு விளக்குகிறார்கள்.
தில்லி அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள், நீச்சம் குளம் என பன்னாட்டு தரம் வாய்ந்த பள்ளிகளுக்கு நிகராக செயல்பட்டு வருகின்றன. எனவே, தில்லி சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், தில்லி அரசுப் பள்ளிகளை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு, தமிழகத்திலும் அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் வகையில், தில்லி அரசுப் பள்ளிகள் செயல்படும் விதத்தை இன்று நேரில் சென்று பார்வையிட்டு, அதிகாரிகளிடம் விளக்கம் பெற்று வருகிறார்.
அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், தில்லியில் அமைந்துள்ள அரசு மொஹலா கிளினிக்கை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, 500 மொஹலா கிளினிக்குகள் உள்ளதாகவும்,அதனை 1000-ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், இக்கிளினிக்குகளை தில்லி மெட்ரோ இரயில் நிலையம், விமான நிலையம் ஆகிய இடங்களில் தொடங்க உள்ளதாகவும், மகளிருக்கான தனி மொஹலா கிளினிக்குகளை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.