போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 90 விமானிகளுக்கு தடை விதித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விமானிகள் அனைவரும் மீண்டும் பயிற்சி பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிஜிசிஏ இயக்குநர் அருண் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மேக்ஸ் ரக விமானங்களை இயக்க இந்த விமானிகளுக்கு தடை விதித்துள்ளோம். இவர்கள் அனைவரும் மீண்டும் பயிற்சியை வெற்றிகரமாக மேற்கொள்ள வேண்டும்.
இந்த 90 விமானிகளும் மற்ற வகை போயிங் விமானங்களை இயக்க முடியும். இதனால், விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படாது.”
இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட்டின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
மேக்ஸ் ரக விமானத்தை இயக்க 650 விமானிகளுக்கு ஸ்பைஸ்ஜெட் பயிற்சி அளித்துள்ளது. இதில், 90 விமானிகளின் பயிற்சி விவரங்களை பார்வையிட்ட டிஜிசிஏ, இவர்களுக்கு மேக்ஸ் ரக விமானத்தை இயக்க தடை விதிக்க ஆலோசனை வழங்கியது.
இது மேக்ஸ் ரக விமானத்தை இயக்குவதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது 11 மேக்ஸ் விமானங்களை இயக்கி வருகின்றது. அதற்கு 144 விமானிகள் தேவைப்படுகின்றனர். ஆனால், 560 விமானிகள் உள்ளனர்.”
இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு மேக்ஸ் ரக விமானத்தை இயக்கி கொள்ள டிஜிசிஏ அனுமதி அளித்துள்ளது. மேக்ஸ் ரக விமானத்தால், சிங்கப்பூர், குவைத், அபுதாபி, மாஸ்கோ போன்ற இடங்களுக்கு இந்தியாவிலிருந்து இடைவிடாமல் பறக்க முடியும்.