தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு: பள்ளிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் இன்று வெளியீடு

தேசிய தலைநகர் தில்லியில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு புதிய கரோனா வழிகாட்டுதல்கள் இன்று வெள்ளிக்கிழமை தில்லி அரசு வெளியிடுகிறது.
தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு: பள்ளிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் இன்று வெளியீடு

புது தில்லி: தேசிய தலைநகர் தில்லியில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு புதிய கரோனா வழிகாட்டுதல்கள் இன்று வெள்ளிக்கிழமை தில்லி அரசு வெளியிடுகிறது.

தெற்கு தில்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் ஆசிரியர் மற்றும் மாணவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: தலைநகரில் கரோனா பாதிப்புகள் சற்று அதிகரித்துள்ளன, ஆனால், மருத்துவமனையில் சோ்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லை. எனவே, நாம் கவலைப்படத் தேவையில்லை. பீதி அடையவும் தேவையில்லை. இருப்பினும், நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கரோனாவுடன் வாழ நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

தில்லி அரசு தொடா்ந்து கரோனா நிலைமையைக் கண்காணித்து வருகிறது. கடந்த சில நாள்களில் சில பள்ளிகளில் இருந்து எனக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளன. அந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் சிலருக்கு நோய்த்தொற்று பாதிப்பு இருப்பதாக பெற்றோா் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக பள்ளிகளுக்கு கல்வித் துறை புதிய பொது வழிகாட்டுதல்கள் விதிமுறைகள் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடும் என்று சிசோடியா கூறினார். 

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 325 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதியதாக தொற்று பாதிப்பு விகிதம் 2.39 சதவிகிதமாக அதிகரித்துள்ளன. புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளன. புதன்கிழமை 299 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது, தினசரி பாதிப்பு விகிதம்  2.49 சதவிதமாக உள்ளது. 

நோய்த்தொற்று காரணமாக 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, பிப்ரவரி 28 ஆம் தேதி தொற்று தொடர்பான அனைத்து தடைகளும் நீக்கப்பட்டதை அடுத்து ஏப்ரல் 1 முதல் பள்ளிகள் முற்றிலும் நேரடி வகுப்புகள் செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் பள்ளிகளில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது பொற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கவலையை அதிகரித்துள்ளது.

பள்ளிக் கட்டண உயர்வு குறித்து பேசிய அமைச்சர், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தில்லி பள்ளிகளின் கட்டணத்தை உயர்த்த அரசு அனுமதிக்கவில்லை என்றும், தற்போது தனியார் பள்ளிகள் 2 முதல் 3 சதவிகதம் வரை மட்டுமே கட்டணத்தை உயர்த்த அனுமதித்துள்ளதாகவும் கூறினார்.

2015 ஆம் ஆண்டு முதல் தனியார் பள்ளிகள் கட்டணத்தை அதிகரிக்க அனுமதிக்கவில்லை, மேலும் கரோனா பாதிப்பு காரணமாக 2020 வரை தொடர்ந்தோம். ஆனால் தற்போது மிகக் குறைந்த அளவில் பள்ளிகளை 2 முதல் 3 சதவிகிதம் வரை மட்டுமே அதிகரிக்க அனுமதித்துள்ளோம்," என்று கூறிய வர், தாங்களாகவே கட்டணத்தை உயர்த்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com