மிசோரமில் பன்றிகளுக்கு, ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது திரிபுராவிலும் அந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
திரிபுராவின் விலங்குகள் வள மேம்பாட்டுத் துறை சார்பில் நடத்தப்படும் அரசுப் பண்ணையில் பராமரிக்கப்பட்டு வரும் பன்றிகளுக்கு ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது.
பண்ணையில் நன்கு வளர்ந்த 60 பன்றிகள் திடீரென எந்தக் காரணமும் இன்றி பலியானதைத் தொடர்ந்து அங்கு எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இறந்த பன்றிகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டதில், அனைத்து பன்றிகளுக்கும் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, திரிபுராவில் பெரிய அளவில் பன்றிகளைக் கொன்று புதைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதைக்கு 8 அடி அகலம், 8 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டு, பாதிக்கப்பட்டு பலியான பன்றிகள் புதைக்கப்பட்டுள்ளன.
நிலைமையை கையாள தனிப்படை அமைக்கப்பட்டு, பன்றிகளுக்கான பண்ணைகளில் தீவிர கண்காணிப்புப் பணிகளை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மிசோரத்தில் இதுவரை 17 கிராமங்களில், 700 பன்றிகளுக்கு ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், திரிபுராவிலும் இந்த நோய் பாதிப்பு பரவியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.