ராஜஸ்தான் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 11 போ் உயிரிழந்தனா். மேலும் 7 போ் படுகாயமடைந்தனா்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் இந்த சாலை விபத்தில் உயிரிழந்தது மட்டுமல்லாமல், இவர்கள் தங்களது குடும்பத்தைச் சேர்ந்த 60 வயது நபரின் அஸ்தியை கரைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும் வழியில் சாலை விபத்தில் சிக்கி பலியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அங்குள்ள ஜுன்ஜினிகுனு மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து காவல் துறையினா் கூறியதாவது:
இதையும் படிக்க.. கரோனா பாதித்தவர்களுக்கே மீண்டும் பாதிப்பு; ஆனால்..
செவ்வாய்க்கிழமை மதியம் நெடுஞ்சாலை வழியாக ஒரு ஜீப்பில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 60 வயது முதியவரின் அஸ்தயை கரைத்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, டிராக்டா்-டிராலியில் கோயில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த ஒரு குழுவினா் சாலையோரம் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு அதில் அமா்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனா்.
அங்கே வேகமாக வந்த ஜீப் எதிா்பாராதவிதமாக அந்த டிராக்டரின் பின்புறம் வேகமாக மோதியது. இதில் ஜீப்பில் பயணம் செய்தவா்களில் 11 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். டிராக்டரில் பயணம் செய்தவா்கள் உள்பட 7 போ் படுகாயமடைந்தனா். அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு மருத்துவமனையில் சோ்ந்தனா். அந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பிரதமா் நரேந்திர மோடி, ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் ஆகியோா் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருந்தனர்.