தில்லியின் ஜஹாங்கீர்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தற்காலிகமாக நிறுத்த பிறப்பிக்கப்பட்ட தடை மேலும் 2 வாரங்களுக்கு தொடரும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுதாரர்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் அதன் மீது மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, நோட்டீஸ் உள்ளிட்ட முன்னறிவிப்புகள் எதுவும் இன்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கூறினார். இதற்கு, சட்டதிட்டங்களுக்கு உள்பட்டே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஒரு சில நடவடிக்கைகளுக்கு முன்னறிவிப்பு எதுவும் கொடுக்கத் தேவையில்லை என்று வடக்கு தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க.. அரிய நிகழ்வு: கர்நாடகத்தில் இரட்டைக் குட்டிகளை ஈன்ற யானை
தில்லி ஜஹாங்கீா்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை உடனடியாக நிறுத்த உச்சநீதிமன்றம் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டிருந்தது.
வடக்கு தில்லி மாநகராட்சித் தரப்பில் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றும் பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. அதில், ஒருபகுதியாக ஜஹாங்கீா்புரியிலும் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டிருந்தது.
இதற்கிடையே, ஜஹாங்கீா்புரி பகுதியில் சனிக்கிழமை ஹனுமன் ஜெயந்தி ஊா்வலத்தின் போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் 9 காவலர்களும், பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்தனா். தொடர்ந்து, அப்பகுதியை சுற்றிலும் 1,250 சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஜஹாங்கீா்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை வடக்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் கடந்த வாரம் தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.
ஜவாங்கீர்புரி பகுதியில் ஏற்பட்ட வன்முறையை கருத்தில் கொண்டு ஒரு தரப்பினரின் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மட்டும் அகற்றப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், தற்போது இருக்கும் நிலையே அங்கு தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தடையை மேலும் 2 வாரத்துக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.