மகாரஷ்டிர எம்.பி.யும் நடிகையுமான நவ்நீத் ராணா, எம்.எல்.ஏ. ரவி ராணா ஆகியோருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதித்து பாந்த்ரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் முதல்வா் உத்தவ் தாக்கரேயின் வீட்டின் முன்பாக ஹனுமன் மந்திரம் (சாலீசா) ஓதப்போவதாக சவால் விடுத்த சுயேச்சை எம்எல்ஏ ரவி ராணா, அவருடைய மனைவியும் சுயேச்சை எம்.பி.யுமான நவ்நீத் ராணாவுடன் சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டாா்.
ஹனுமன் மந்திரம் ஓதும் திட்டத்தைக் கைவிடுவதாக ராணா தம்பதி அறிவிப்பு வெளியிட்ட சில மணி நேரங்களில், வேறுபட்ட சமூக, மொழி பிரிவினரிடையே பகைமையைத் தூண்டும் குற்றத்துக்கான சட்டப் பிரிவு 153ஏ, காவல் துறையின் தடை உத்தரவை மீறுதல் குற்றத்துக்கான சட்டப் பிரிவு 135 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இதையும் படிக்க- பஞ்சாயத்து அமைப்புகள் இந்திய ஜனநாயகத்தின் தூண்கள்: பிரதமர் மோடி
இந்த நிலையில் கைதான இருவரும் பாந்த்ராவில் உள்ள நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இருவருக்கும 14 நாள் நீதிமன்றக் காவல் விதித்து பாந்த்ரா விடுமுறை கால நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதேசமயம் இருவரின் ஜாமீன் மனு ஏப்ரல் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, எம்.எல்.ஏ ரவி ராணா செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்கள் மீது அவர்கள் பொய்யான குற்றத்தைப் பதிவு செய்துள்ளனர் என்றார்.