பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தில் நடக்கும் நாடகம், மூத்த மகன் தேஜ் பிரதாப்பின் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக தொலைக்காட்சித் தொடர்களைப் போல நீண்டு கொண்டே செல்கிறது.
தேஜ் பிரதாப், செவ்வாய்க்கிழமை இரவு தாய் ராப்ரி தேவியின் இல்லத்துக்கு வந்து இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்தார். இந்த நிலையில், இனி தேஜ் பிரதாப், அரசு வழங்கிய குடியிருப்பில் தங்கப்போவதில்லை என்றும், தாய் ராப்ரி தேவியுடனேயே தங்கியிருக்கப் போவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
ஆனால், மகன் மீண்டும் தாயுடன் இணைந்தது, கொண்டாட்டத்துக்குப் பதிலாக திண்டாட்டத்தையே கொடுத்துள்ளது குடும்ப உறுப்பினர்களுக்கு. அதற்கக் காரணம், தனது ராஜிநாமா கடிதத்தை தந்தையிடம் வழங்கப்போவதாக திங்கள்கிழமை தேஜ் பிரதாப் சுட்டுரையில் குறிப்பிட்டிருந்ததே காரணம்.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தற்போது, லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஒருவர், தேஜ் பிரதாப்புக்கு எதிராக சில பல குற்றச்சாட்டுகளை எழுப்பிய நிலையில், அங்கு சர்ச்சை வெடித்துள்ளது.