பெண் காவலரைத் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு பர்பேட்டா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி குறித்த சுட்டுரைப் பதிவு தொடா்பான வழக்கில் குஜராத் மாநில சுயேச்சை எம்எல்ஏவும், தலித் உரிமைகள் அமைப்பின் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி அஸ்ஸாம் போலீஸாரால் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். குஜராத்துக்கு வந்து மேவானியை கைது செய்த அஸ்ஸாம் காவல் துறையினா் அவரைத் தங்கள் மாநிலத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.
இவ்வழக்கில் அஸ்ஸாம் நீதிமன்றம் திங்கள்கிழமை அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் ஜாமீனில் வெளிவந்த அடுத்த சில மணிநேரத்தில் ஜிக்னேஷ் மேவானியை மற்றொரு வழக்கில் அஸ்ஸாம் போலீசார் மீண்டும் கைது செய்தனர். குவாஹட்டியில் இருந்து கோக்ரஜாருக்கு போலீஸாரால் அழைத்து வரப்பட்ட போது, பெண் காவலரை மேவானி தாக்கியதாக புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பர்பேட்டா நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட மேவானியை 5 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே இவ்வழக்கில் ஜாமீன் கோரி பர்பேட்டா நீதிமன்றத்தில் ஜிக்னேஷ் மேவானி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் ஜிக்னேஷ் மேவானிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், ஜிக்னேஷ் மேவானி சிறையிலிருந்து நாளை வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.