புதுதில்லி: தில்லி ஜாமியா நகரில் இருந்து பஞ்சாப் மற்றும் பிற வட மாநிலங்களுக்கு அனுப்பப்பட இருந்த ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை தேசிய போதைப் பொருள்கள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்கிழக்கு தில்லி ஜாமியா நகர் ஷாகீன் பாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தேசிய போதைப் பொருள்கள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த பகுதியில் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வந்த அதிகாரிகள், ஒரு வீட்டில் போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த வீட்டிற்குள் வியாழக்கிழமை அதிரடியாக நுழைந்த அதிகாரிகள், அங்கிருந்த 50 கிலோ ஹெராயின், ரூ.40 லட்சத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் மதிப்பு மதிப்பு ரூ.100 கோடி எனவும், பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் பஞ்சாப் மற்றும் பிற வட மாநிலங்களுக்கு அனுப்பப்பட இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.