பெங்களூரு: ஒரு வாகனம், காப்பீடு எடுத்திருந்து, விபத்தை ஏற்படுத்தும் போது தகுதிச் சான்று (எஃப்சி), வாகன உரிமம் (பெர்மிட்) சான்றுகள் புதுப்பிக்கப்படாமல் இருந்தாலும் கூட காப்பீட்டு நிறுவனம், நிவாரணத் தொகை அளிப்பதிலிருந்து தப்பிக்க முடியாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி வாகனம் ஒன்று, ஏற்படுத்திய விபத்தில் குடும்பத் தலைவர் மரணமடைந்த நிலையில், விபத்து நேரிட்ட போது அந்த வாகனத்துக்கு உரிய தகுதிச் சான்றிதழோ, வாகன உரிமமோ இல்லை என்பதைக் காரணம் காட்டி, உயிரிழந்தவரின் குடும்பத்துக்குரிய நிவாரணத்தொகையை பேருந்து உரிமையாளரே முழுமையாக வழங்க வேண்டும் என்று உள்ளூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளது உயர் நீதிமன்றம்.
இதையும் படிக்க | வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
பள்ளிப் பேருந்தின் உரிமையாளருக்கு மாற்றாக, முழு நிவாரணத் தொகையையும் காப்பீட்டு நிறுவனமே வழங்க வேண்டும் என்றும், இந்த விபத்து நேரிட்டபோது, வாகனத்துக்கு காப்பீடு இருந்துள்ளது. ஆனால், தகுதிச் சான்றிதழும் வாகன உரிமமும் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தகுதிச் சான்றிதழ் இருக்கும் போதுதான் காப்பீட்டு நிறுவனம் காப்பீடு அளித்துள்ளது. காப்பீடு எடுத்தப் பிறகுதான் தகுதிச் சான்றிதழ் காலாவதியாகியுள்ளது. எனவே, தகுதிச் சான்றிதழ் இல்லை என்பதை காரணம் காட்டி காப்பீட்டு நிறுவனம் தனது பொறுப்பிலிருந்து விலக முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.