கேரள அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு பால், முட்டை வழங்கும் திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் தொடக்கி வைத்தார்.
கேரள மாநிலத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கும்பொருட்டு, அனைத்து அங்கன்வாடிகளிலும் 3 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பால், முட்டை வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார்.
அதன்படி இந்தத் திட்டத்தினை முதல்வர் பினராயி விஜயன் திங்கள்கிழமை தொடக்கிவைத்தார். ஒவ்வொரு திங்கள், வியாழக்கிழமைகளில் பாலும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் முட்டையும் வழங்கப்படுகிறது. காலை உணவுடன் இவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் மாநிலத்தில் உள்ள 33,115 அங்கன்வாடிகளில் 4 லட்சம் குழந்தைகளுக்கு பால், முட்டை வழங்கப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 61.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.