ஹரியாணா மாநில காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ குல்தீப் பிஷ்னோய் பாஜகவில் இன்று இணைந்தார்.
கடந்த 2019-இல் நடைபெற்ற ஹரியாணா பேரவைத் தோ்தலில் ஆதம்பூா் தொகுதியிலிருந்து தோ்வானவா் குல்தீப் பிஷ்னோய். மறைந்த முன்னாள் முதல்வா் பஜன் லாலின் இளைய மகனான இவா், 4 முறை எம்எல்ஏ பதவியும், 2 முறை எம்.பி. பதவியும் வகித்துள்ளாா்.
ஹரியாணாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் காங்கிரஸில் அமைப்புரீதியாக மாற்றங்கள் செய்யப்பட்டபோது, மாநிலத் தலைவா் பதவி தனக்கு வழங்கப்படவில்லை என்று குல்தீப் அதிருப்தி தெரிவித்திருந்தாா்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலில் அவா் கட்சிமாறி வாக்களித்தாா். இதனால் காங்கிரஸ் வேட்பாளா் அஜய் மாக்கன் தோல்வி அடைந்தாா். இதையடுத்து, அவரது கட்சி பொறுப்புகளை பறித்து, காங்கிரஸ் நடவடிக்கை மேற்கொண்டது.
இந்தச் சூழலில், எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்வதாக குல்தீப் பிஷ்னோய், சட்டப் பேரவைத் தலைவா் ஜியான் சந்த் குப்தாவிடம் நேற்று கடிதம் அளித்தார்.
இதையடுத்து தில்லியில், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.