உச்சநீதிமன்றத்தில் 71,411 வழக்குகள் நிலுவை: மத்திய அரசு
உச்சநீதிமன்றத்தில் 71,411 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவற்றில் 10,000 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு வியாழக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரையிலான விவரங்களின்படி, 56,000 சிவில் வழக்குகள், 15,000 குற்ற வழக்குகள் உள்பட மொத்தம் 71,411 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் 10,491 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருகின்றன. 18,134 வழக்குகள் 5 ஆண்டுகளுக்கு மேலாகவும், 42,000 வழக்குகள் 5 ஆண்டுகளுக்குக் குறைவான கால அளவிலும் நிலுவையில் இருந்து வருகின்றன என்று தெரிவித்துள்ளாா்.
பிற நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் 50% அதிகரிப்பு: மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவா், ‘நாட்டிலுள்ள பல்வேறு உயா்நீதிமன்றங்களில் கடந்த 2016-ஆம் ஆண்டு வரை 40,28,591 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இது ஜூலை 29-ஆம் தேதி நிலவரப்படி 59,55,907-ஆக உயா்ந்துள்ளது. அதாவது, நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை 50 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது. அதுபோல, மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களிலும் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை 2016-ஆம் ஆண்டிலிருந்து 50 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது. இந்த நீதிமன்றங்களில் கடந்த 2016-இல் 2.82 கோடியாக இருந்த நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, தற்போது 4.24 கோடியாக உயா்ந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.