2024 தேர்தலிலும் நீங்கள் வெற்றி பெறனும்...மோடிக்கு ராக்கி கயிறு அனுப்பி பாகிஸ்தான் பெண் வாழ்த்து!
புதுதில்லி: ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பெண் ஒருவர், 2024 பொதுத் தேர்தலிலும் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்து ராக்கி கயிறு அனுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் உடன்பிறப்புகளுக்கு இடையிலான அன்பின் பிணைப்பைக் குறிக்கும் ரக்ஷா பந்தன் பண்டிகை ஆகஸ்ட் 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சகோதர பாசத்தை குறிக்கும் வகையில் பெண்கள் தங்களது சகோதரர்களுக்கும், ஆண்கள் தங்களது சகோதரிகளுக்கும் கையின் மணிக்கட்டில் ராக்கி என்ற புனித மஞ்சள் கயிற்றை கட்டுவர். மேலும் பரிசுகளும் வழங்குவர். நாட்டின் வட மாநிலங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது ரக்ஷா பந்தன்.
அந்த வகையில் பாகிஸ்தானைச் சேர்ந்த குவாமர் மோசின் ஷேக் என்ற பெண் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ராக்கி கயிறு மற்றும் வாழ்த்து அட்டை வழங்கி ரக்ஷா பந்தனை கொண்டாடி வருகிறார்.
மோடியும் பாகிஸ்தான் பெண் வழங்கும் கயிற்றை கட்டிக்கொண்டு பாகிஸ்தான் பெண்ணுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்.
இதையும் படிக்க | 2 செயற்கைக்கோள்களை பயன்படுத்த இயலாது: இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்நிலையில், வரும் 11 ஆம் தேதி ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட உள்ள நிலையில், குவாமர் மோசின் ஷேக், பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஆண்டும் ராக்கி கயிறு மற்றும் வாழ்த்து அட்டை அனுப்பியுள்ளார். அதோடு வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலிலும் மோடி வெற்றி பெற விருப்பம் தெரிவித்து வாழ்த்து கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு பிரதமர் மோடி எப்படியும் நேரில் சந்திப்பதற்கு தில்லிக்கு அழைப்பார் என்று நம்புகிறேன். இந்த சந்திப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன். எம்பிராய்டரி டிசைனுடன் கூடிய ரேஷ்மி ரிப்பனை கொண்டு நானே ராக்கி கயிறை தயாரித்துள்ளேன்.
மேலும், பிரதமர் மோடி நீண்ட ஆயுளும், உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தித்தேன். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தவர், பிரதமராக மீண்டும் மோடி தேர்வு செய்யப்படுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கு அவர் அனைத்து தகுதிகளையும் கொண்டவர் என்பதால் ஒவ்வொரு முறையும் அவரே பிரதமராக வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்.