பிகார் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த நிதீஷ் குமாருக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளதாக ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவர் ஜித்தன் ராம் மன்ஜி தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களாகவே பிகார் அரசியலில் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் அறிவித்திருந்தார்.
அவர் தனது முதல்வர் பதவியையும் ராஜிநாமா செய்வதாகத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று (ஆக. 9) மாலை ஆளுநர் பகு சௌஹானை நேரில் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.
இதனால், பாஜகவுடனான கூட்டணி முடிவுக்கு வந்த நிலையில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் பிகாரில் நிதீஷ் குமார் மீண்டும் ஆட்சியமைப்பார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நிதீஷ் குமாருக்கு ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஐக்கிய ஜனதா தள கட்சியிலிருந்து விலகிய ஜித்தன் ராம் மன்ஜி இக்கட்சியின் தலைவராக உள்ளார். இவர் பிகார் மாநில முன்னாள் முதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.