பிகார் விவகாரத்தில் பாஜக அழுத்தம் கொடுத்தால் தக்க பதிலடி வழங்கப்படும் என ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிகார் மாநிலத்தில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் முடிவு செய்துள்ளார். இன்று மாலை பிகார் ஆளுநரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அளிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவுடன் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளத்தை உடைத்து பிகாரில் மகாராஷ்டிர மாடலைக் கொண்டு வர திட்டமிடப்பட்ட நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் உறவை முறித்துக் கொண்டு, ராஷ்ட்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கை கோர்த்து புதிய ஆட்சியை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுத்தார் நிதிஷ் குமார்.
இந்நிலையில், பாஜக உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் அரசியல் குழப்பங்களை முடித்து வைக்கும் விதமாக இன்று நிதிஷ்குமார் தேசிய ஜனநாயக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்ததுடன், முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அம்மாநில எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் ‘பிகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர பாஜக முயன்றால் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும். அதரவுக் கட்சிகளின் பங்கீடுகளில் எந்த மாற்றமும் இல்லை. கூட்டணியில் உள்ள மொத்தம் 160 எம்எல்ஏக்களின் ஆதரவு நிதிஷ்குமாருக்கு இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.