உத்தரப் பிரதேசத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம் வழங்குவதற்கு திட்டமிட்டு வருவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ரக்ஷா பந்தனையொட்டி பெண்களுக்கு அரசுப் போக்குவரத்தில் சலுகைகளை வழங்குவது தொடர்பான அறிவிப்பில், யோகி ஆதித்யநாத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஹிந்தியில் அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ரக்ஷா பந்தனையொட்டி மாநிலத்திலுள்ள பெண்கள் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி பின்னிரவு 12 மணி வரை இலவசமாக பயணிக்கலாம். இலவச பயணத்திற்கான அரசுப் பேருந்துகளின் முகப்பில் தேசியக் கொடியுடன் இயக்கப்படும். இதன் மூலம் சகோதரிகள், தாய்மார்கள் பாதுகாப்பாக தாங்கள் விரும்பும் பகுதிகளுக்குச் செல்ல இயலும்.
60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கும் வகையிலான திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
கரோனா பொதுமுடக்கத்தின்போது பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை அழைத்து வருவதற்காகவும், அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு சென்று சேருவதற்காகவும் அரசு போக்குவரத்துத் துறை பயன்படுத்தப்பட்டது.
மேலும், விமான நிலையங்கள் உலகத் தரத்தில் கட்டப்படும்போது, பேருந்து நிலையங்களை ஏன் உலகத் தரத்தில் அமைக்கக்கூடாது. தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், சுத்தமான கழிவறைகளுடன் பேருந்து நிலையங்கள் அமைக்க வேண்டும். பழைய பேருந்துகளை நீக்கி புதிய பேருந்துகளை பயன்படுத்தவும் முதல்வர் அழுத்தம் கொடுத்துள்ளார்.