
தற்கொலைப்படைத் தாக்குதலில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் சுபேதார் ராஜேந்திர பிரசாத், ரைபிள்மேன் மனோஜ் குமார் மற்றும் ரைபிள்மேன் டி லட்சுமணன்.
ஜம்மு - காஷ்மீர் அருகே ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஜௌரி மாவட்டத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ராணுவ முகாமில் இன்று அதிகாலை புகுந்த பயங்கரவாதிகள் தற்கொலைப் படையினர் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இதையும் படிக்க | ‘ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டணச் சலுகை’
அப்பகுதியில், தொடர்ந்து ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 75ஆவது சுதந்திர தினத்தை பிரம்மாண்டமாக கொண்டாட தயாராகி வரும் சூழலில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.