"நாட்டை 21-ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு தயார்படுத்த பல மாற்றங்களுக்கான முயற்சிகளை முன்னெடுத்தவர் மறைந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்' என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நான்காம் ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தில்லியில் அவரது நினைவிடத்தில் அஞ்சலியும் பிரார்த்தனைகளும் நடைபெற்றன.
இதில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள், அமித் ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், பூபேந்திர யாதவ், கிரிராஜ் சிங் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமிதா கெளல் பட்டாச்சார்யா உள்ளிட்டவர்களும் நினைவு அஞ்சலி பிரார்த்தனைகளில் பங்கேற்றனர்.
வாஜ்பாய் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "இந்தியாவுக்கு சேவை புரிய அடல்ஜி மேற்கொண்ட முயற்சிகள் நம்மை ஊக்குவிக்கின்றன. 21-ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு நாட்டைத் தயார்படுத்த பல மாற்றங்களுக்கான முயற்சிகளை முன்னெடுத்தார்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தாய்நாட்டின் பெருமையைப் பாதுகாக்க, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தனது வாழ்நாளில் ஒவ்வொரு தருணத்தையும் செலவிட்டார். இந்திய அரசியலில் ஏழைகள் நலன், நல்லாட்சிக்கான புதிய யுகத்தை அவர் தொடங்கினார். அதேசமயம், இந்தியாவின் வலிமையையும், துணிச்சலையும் உலகுக்கு உணர்த்தினார்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
"வாஜ்பாயின் முழு வாழ்க்கையும் தேசத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டது. அவரது கவிதைகள், லட்சிய அரசியல் வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் எப்போதும் நமக்கு உத்வேகமாக இருக்கும்' என பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.