தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பு 20 - 30 நிமிடங்கள் வரை நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் அளிக்கவுள்ளார்.
முன்னதாக, செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு முதல்வர் நன்றி தெரிவித்தார். மேலும், இதுபோன்ற சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்புகளை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் எனவும் கோரவுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், கடந்த சந்திப்புகளில் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் நினைவூட்டப்படும் எனத் முதல்வர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
அதன்படி, நீட் விலக்கு, புதிய கல்வி கொள்கை காவிரி விவகாரம், மேக்கேதாட்டு அணை விவகாரம், முல்லைப் பெரியாறு, நதிநீர் இணைப்பு, கட்சத்தீவு மீட்பு, மீனவர்களுக்கான தேசிய ஆணையம், மின்சாரத் திருத்தச்சட்டத்தை திரும்பப் பெறுதல், தமிழகத்திற்கு நிலுவையிலுள்ள தொகையினை விடுவிப்பது உள்ளிட்டவை குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைக்கவுள்ளார்.
ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, மழைக்காலம் வரவுள்ளதால், பேரிடர் நிவாரண நிதியினை உடனடியாக விடுவிப்பது, சென்னை விமான நிலைய விரிவாக்கம், ஏய்ம்ஸ் மருத்துவமனை போன்ற கட்டமைப்பு வசதிகள் குறித்தும் பிரதமரிடம் முதல்வர் விவாதிக்கவுள்ளார்.