இந்திய அரசியல் குறித்த வெளிநாட்டுவாழ் தமிழரின் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.
அரசுமுறை பயணமாக தாய்லாந்து நாட்டின் பேங்காக் சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடி வருகிறார்.
இந்நிலையில் கலந்துரையாடல் ஒன்றில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட வெளிநாடுவாழ் தமிழர் ஒருவர் எழுப்பிய மத்திய-மாநில அரசுகளின் உறவு குறித்த கேள்விக்கு அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.
மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கிடையே நிலவிவரும் அரசியல் மோதல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர், “இந்திய அரசியல் விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கு வெளிநாட்டு பயணங்களில் பதிலளிப்பது முறையாக இருக்காது. இந்தியா வந்து இந்தக் கேள்வியை நீங்கள் எழுப்பினால் நான் மகிழ்ச்சியாக பதிலளிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் இந்தியா-தாய்லாந்து உறவு, இந்திய பல்கலைக்கழகங்கள், ஆத்மநிர்பார், ரஷியா-உக்ரைன் போர் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்தார்.