ஹைதராபாத்: வயதான தம்பதியின் வங்கிக் கணக்கிலிருந்து மோசடியான முறையில் எடுக்கப்பட்ட ரூ.63.7 லட்சத்தை வங்கியே திரும்ப செலுத்த வேண்டும் என்று தெலங்கானா மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்களாக இருந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பிரேஷ் சந்திரா (92) கண்பார்வை பாதிக்கப்பட்டவர். அவரது மனைவி ஆர்த்தி (86) முற்றிலும் கண்பார்வை இழந்தவர்.
இதையும் படிக்க | பயணிகளின் விவரங்களை பகிரும் தகவல் கற்பனையானது: இந்திய ரயில்வே
இவர்களது வங்கிக் கணக்கிலிருந்து சுமார் ரூ.63.75 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கேட்காமலேயே, இந்த வங்கிக் கணக்குகளுக்கு ஆன்லைன் பேங்கிங் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது வங்கி. அந்த ஆன்லைன் பேங்கிங் மூலம் சுமார் 37 பணப்பரிவர்த்தனைகள் மூலம் 63,74,536 ரூபாய், ஐந்து நிறுவனங்களின் பெயர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
வாடிக்கையாளர்கள் இருவரும் கண்பார்வை பாதிக்கப்பட்டவர்கள் என்பதால், வியு ஒன்லி என்ற முறையில் ஆன்லைன் வங்கிச் சேவையைத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், அதனை வங்கி மாற்றி பணப்பரிவர்த்தனை செய்யும்வகையில் கொண்டு வந்திருக்கிறது. இதனைப் பயன்படுத்தி முதியவர்களின் வீட்டில் வேலை செய்து வந்த நபர், பணத்தை முறைகேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது முழுக்க முழுக்க வங்கியின் கவனக்குறைவால் நடந்த தவறு என்பதால், மோசடி செய்யப்பட்ட தொகையை முதிய தம்பதிக்கு வங்கியே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.