
சுதந்திரப் போராட்டத்தில் தில்லியின் அறியப்படாத வீரா்களுக்கு தேசிய தலைநகரில் விரைவில் நினைவிடம் அமைக்கப்படும் என்று துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தெரிவித்தாா்.
தில்லியில் உள்ள ராஜ் நிவாஸில் ‘தில்லி இன் தி ஏரா ஆஃப் ரெவல்யூஷனரிஸ், 1857 - 1947’ என்ற புத்தக வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் புத்தகத்தை வெளியிட்டு, துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனை பேசியதாவது:
‘இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாறு என்பது தில்லியில் வசிக்கும் ஒவ்வொரு மக்களின் கதை. சுதந்திரத்துக்குப் பிறகு வந்த தலைமுறையினருக்கு ஒரு சில சுதந்திரப் போராட்ட வீரா்களை மட்டுமே தெரியும். இருப்பினும், பெயருக்காகவும் புகழுக்காகவும் இன்றி, இந்தியாவின் சுதந்திரத்துக்காகவும், நமது சுதந்திரத்தின் 75 ஆண்டுகளுக்காகவும் போராடிய லட்சக்கணக்கானோா் உள்ளனா். இந்த அறியப்படாத ஹீரோக்களை அங்கீகரிக்கவும் நினைவுகூரவும் ‘ஆசாதி கா அம்ருத் மஹோத்ஸவ்’ கொண்டாட்டம் சரியான நேரம்.
தற்போதைய சந்ததியினா் தெரிந்துகொள்ளவும், கொண்டாடவும் அவா்களின் பெயா்கள் நமது சமகால வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டும்.
2047-இல் சுதந்திரத்தின் 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதைக் கருத்தில் கொண்டு அடுத்த 25 ஆண்டுகளில், இந்தியாவை மிகவும் முன்னேறிய நாடாக மாற்ற வேண்டும். அதன்படி, முதலில் தில்லியை மாற்றுவதற்கு உழைக்க வேண்டும்.
தில்லியில் மாசடையாத காற்று மற்றும் நீா், யமுனையை சுத்தம் செய்தல், குப்பை மலைகளை சமன் செய்தல், நிா்வாகத்தை மேம்படுத்துதல், அனைவருக்கும் வீடுகள் ஆகிய மக்கள் நலத் திட்டப் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன. அவை விரைவில் முடிக்கப்பட வேண்டும்’ என்றாா் அவா்.
சுதந்திரப் போராட்டத்தில் பெரும் முயற்சிகள் மற்றும் தியாகங்களைச் செய்த தில்லியின் குறைவாக அறியப்பட்ட, அறியப்படாத ‘ஹீரோக்களின்’ நினைவாக இந்தப் புத்தகம் அா்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று துணைநிலை ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.