குருகிராமில் 11 வயது சிறுமி பள்ளியில் திடீரென மயங்கி விழுந்து மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குருகிராமில் செக்டார் 64-ல் உள்ள தனியார் பள்ளியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு வந்துள்ளார்.
பள்ளியில் நடத்தப்படும் காலை பிரார்த்தனையில் பங்கேற்ற பிறகு, வகுப்பறைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென மயங்கி அந்த இடத்திலேயே சரிந்துள்ளார்.
இதையடுத்து, பள்ளி ஊழியர்கள் மாணவியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மாணவி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மாணவி செக்டார் 65ல் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். தன் மகளின் திடீர் உயிரிழப்பால் பெற்றோர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவியின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்பே மாணவியின் மர்ம மரணத்துக்கு விடை கிடைக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.