புது தில்லி : எங்கள் கட்சியில் சேர்ந்துவிட்டால் என் மீது இருக்கும் அனைத்து வழக்குகளையும் முடித்துவிடுவதாக பாஜக எனக்கு அழைப்பு விடுத்தது என்று புது தில்லி துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
தன் மீது வைத்திருக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் பொய் என்று மறுத்திருக்கும் சிசோடியா, எந்த சூழ்ச்சிக்கும் அடிபணிய மாட்டேன், ஊழல்வாதிகளுக்கு தலைவணங்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தில்லியில் கலால் கொள்கையை அமல்படுத்தியில் முறைகேடு நடந்ததாக சிசோடியா உள்பட 15 பேர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்துள்ளது.
"எனக்கு பாஜகவிடமிருந்து அழைப்பு வந்தது.. ஆம் ஆத்மியிலிருந்து விலகி விடுங்கள்.. பாஜகவில் இணையுங்கள். சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை பதிவு செய்திருக்கும் அனைத்து வழக்குகளையும் முடித்துவிடுகிறோம் என்று கூறினார்கள்.
ஆனால் அவர்களுக்கு நான் அளித்த பதிலில், நான் மகாராணா பிரதாப்பின் வழித்தோன்றல், ராஜப்புத்திரன். நான் என் தலை துண்டிக்கப்படுவதற்குக் கூட தயாராக இருக்கிறேன். ஆனால் எந்த சூழ்ச்சிக்கும், ஊழல்வாதிகளுக்கும் என்றும் அடிபணிய மாட்டேன். எனக்கு எதிராக இருக்கும் அனைத்து வழக்குகளும் பொய்யானவை. என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதனைச் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. வாட்ஸ்-ஆப் அட்மின்களுக்கு புதிய வசதி விரைவில் அறிமுகம்
தில்லியில் கலால் கொள்கையில் முறைகேடு நடந்ததாகத் தொடர்பாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சிசோடியா வீடு உள்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.