கர்நாடகத்தில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, மங்களூரு பல்கலைக்கழகத்தில் இருந்து 16% முஸ்லிம் பெண்கள் மாற்றுச் சான்றிதழ் பெற்றுளளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கா்நாடக மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு அந்த மாநில அரசு தடை விதித்தது. இது அங்கு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளித்துள்ள மங்களூரு பல்கலைக்கழகம், ஹிஜாப் தடையால் எங்கள் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் பயின்ற சுமார் 16% மாணவிகள் தங்கள் படிப்பை நிறுத்திவிட்டு 'மாற்றுச் சான்றிதழ்' (TC) வாங்கிவிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
'கடந்த 2021-21, 2021-22 கல்வியாண்டுகளில் பல்வேறு படிப்புகளில் சேர்ந்த 900 முஸ்லிம் மாணவிகளில் 145 பேர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மாற்றுச் சான்றிதழ் வாங்கிவிட்டுச் சென்றுள்ளனர் . இவர்கள், ஹிஜாப் சர்ச்சை வலுத்த, தக்ஷின் கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். தக்ஷின் கன்னடாவைச் சேர்ந்த 13% மாணவிகளும், உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த 14% மாணவிகளும் இடைநிறுத்தம் செய்துள்ளனர். இதில், அதிகபட்சம் அரசுக் கல்லூரி மாணவிகள்தான்' என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மாற்றுச் சான்றிதழ் வாங்கியவர்களில் சிலர், ஹிஜாப் அனுமதிக்கப்பட்ட வேறு தனியார் கல்லூரிகளில் சேர்ந்ததாகவும், சிலர் தனியார் கல்லூரி கட்டணம் அதிகமிருப்பதால் பாதியில் படிப்பை நிறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநில அரசின் கொள்கையால் தங்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள முஸ்லிம் மாணவிகளும் கருத்து தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.